SIVAKASI WEATHER
சிவகாசி பட்டாசுக் கடைகளுக்குப் புதிய கட்டுப்பாடு

29-03-2018
சிவகாசியில் அமைக்கப்படும் பட்டாசுக் கடைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் உத்தரவிட்டுள்ளார்.

சிவகாசியிலும் அதை சுற்றியுள்ள ஊர்களிலும் பல நிறுவனங்கள், பட்டாசுக் கடைகளையும், ஷோரூம்களுடன் கூடிய ஏஜென்சிகளையும் நடத்தி வருகின்றன. சிவகாசி வரும் வியாபாரிகளும், பொதுமக்களும் இந்தக் கடைகளைத்தான் தேடிச் செல்வார்கள். இந்தப் பட்டாசு கடைகளில் பட்டாசு விற்பதற்கான அனுமதியை பாதுகாப்பு விஷயங்களை ஆய்வு செய்து மாவட்ட நிர்வாகம் வழங்கி வருகிறது. பட்டாசு கடை உரிமையாளர்களின் பெயரில் வழங்கப்படும் லைசென்ஸை, இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். சமீபகாலமாகப் பட்டாசுக் கடைகள் பற்றி பல புகார்கள் எழுந்தன. இதையடுத்து சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடைகளை மாவட்ட வருவாய் அலுவலர், சிவகாசி தனி தாசில்தார் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில பட்டாசுக் கடைகள் மற்றும் ஏஜென்சி நிறுவனங்களின் லைசென்ஸ்களில் இடம் பெற்ற உரிமையாளர் பெயருக்கும், தற்போது அந்தப் பட்டாசுக் கடையை நடத்தி வருபவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பட்டாசு விற்பனை லைசென்ஸ் பெற்றுக்கொண்டு வேறு நபர்கள் பட்டாசு விற்பனையில் ஈடுபட்டு வரும் மோசடியைக் கண்டுடித்தனர்.

அதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் விடுத்துள்ள உத்தரவில், ``அனைத்துப் பட்டாசு கடை, பட்டாசு ஏஜென்சி நிறுவனங்களின் லைசென்ஸ்களில் உரிமையாளரின் போட்டோவும் இடம் பெறச் செய்ய வேண்டும். ஏற்கெனவே பெற்ற லைசென்ஸை புதுப்பிக்க விண்ணப்பிக்கும்போது உரிமையாளர் பெயருடன் அவரது போட்டோவும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அவற்றை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து அதன் உண்மைத் தன்மையை உறுதிசெய்த பின், லைசென்ஸ் வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.


News & Events
top