SIVAKASI WEATHER
சிவகாசியில் பசுமை உரக்குடில் அமைக்கும் பணி தீவிரம்

01-03-2019
சிவகாசியில் பசுமை உரக்குடில் அமைக்கும் பணி தீவிரம்

சிவகாசியில் குப்பைகளை உரமாக்கும் வகையில், பசுமை உரக்குடில் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சிவகாசி நகராட்சியில் தினசரி 3 டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பையை பாரைப்பட்டி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு எரியூட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியை சுற்றி 10 கி.மீ தொலைவுக்கு புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்நிலையில், நகராட்சி குப்பைக்கிடங்கில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உரம் தயாரிப்பதற்காக ரூ.3 கோடியில் உரகிடங்கு அமைக்கும் பணிகள் துவங்க பட்டது.

ஆனால், இந்த திட்டத்தில் பசுமை உரக்குடில் அமைக்க பல இடங்களில் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், நகராட்சி நிதி வீணானது. இந்நிலையில், மத்திய அரசின் தூாய்மை இந்தியா திட்டத்தில் நகராட்சி பகுதியில் அனைத்து தரப்பினருக்கும் தனிநபர் கழிப்பறை, மாசை குறைக்கும் வகையில் குப்பை கழிவுகளில் இருந்து உரம் தயாரித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

இதில், சிவகாசி நகராட்சி பகுதியில் செயல்பாட்டுக்கு கொண்ட வரப்பட்ட உரக்கிடங்கு பணிகள் பாதி முடிந்து வீணடிக்கப்பட்ட நிலையில், தற்போது நகராட்சி பகுதியில் 6 இடங்களில் ரூ.2.40 கோடியில் நகராட்சியில் சேகரமாகும் 14 மெட்ரிக் டன் எடையுள்ள மக்கும் தன்மையுடைய திடக்கழிவுகளில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அந்தந்த பகுதியிலேயே உரமாக மாற்றி விவசாயத்திற்கும், பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் பயன்படும் வகையில் பசுமை உரகுடில்கள் அமைக்கும் பணி 3 இடங்களில் முடிவைடந்துள்ளது.

இதன்படி, விஸ்வநத்தம் மார்க்கெட்டில் ரூ.40 லட்சம், நகராட்சி இடுகாடுகளில் ரூ.40 லட்சம், நகராட்சி அம்பேத்கார் சிலை அருகே கிருதுமால் ஓடையில் ரூ.4 லட்சம் என மூன்று இடங்களில் பசுமை உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற இடங்களிலும் உரக்குடில்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த உரக்குடில்கள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்தால் தரமான உரஙகள் குறைவான விலையில் பெறலாம் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Courtesy: Dinakaran


News & Events
top