SIVAKASI WEATHER
சிவகாசியில் வரிகளை வீட்டிலிருந்தே செலுத்தும் வசதி

23-06-2025
சிவகாசியில் பி.ஓ.எஸ்., செயலி மூலம் வரிகளை வீட்டிலிருந்தே செலுத்தும் வசதி

சிவகாசி; சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி நிர்வாகம், சிட்டி யூனியன் வங்கி சார்பில் பி.ஓ.எஸ்., செயலியின் மூலம் மாநகராட்சியில் செலுத்த வேண்டிய அனைத்து வகையான வரி இனங்களை வீட்டிலிருந்தே செலுத்தும் வசதி துவக்கி வைக்கப்பட்டது.

இதற்கான துவக்க விழாவில் மேயர் சங்கீதா தலைமை வகித்தார். கமிஷனர் சரவணன், துணைமேயர் விக்னேஷ் பிரியா முன்னிலை வகித்தனர். சிட்டி யூனியன் வங்கி உதவி பொது மேலாளர் முத்துக்குமார், மேலாளர் நித்தியானந்தம் ஆகியோர், மக்கள், வணிகர்களிடமிருந்து மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரி இனங்களை அவர்கள் இருப்பிடத்திலிருந்து பி.ஓ.எஸ்., செயலியின் மூலம் செலுத்துதல் குறித்தும் செயலியை இயக்குவது குறித்தும் மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர். அனைத்து மாநகராட்சி வருவாய் உதவியாளர்களுக்கு பி.ஓ.எஸ்., செயலி கருவி வழங்கப்பட்டது.

இது குறித்து கமிஷனர் கூறுகையில், சிட்டி யூனியன் வங்கியுடன் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து மாநகராட்சி வருவாய் உதவியாளர்கள் மூலம் செயல்படுத்தும் இத்திட்டத்தின் மூலம் மக்கள், வணிகர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை தங்கள் இருப்பிடத்திலிருந்து செலுத்தி உடனே ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் குறுஞ்செய்தி, இமெயில் மூலம் அலைபேசியில் தெரிந்து கொள்ளலாம். இதனால் மக்கள், வணிகர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று வருவதற்கான கால விரயம் தவிர்க்கப்படுகிறது, என்றார்.

News & Events
top